மினல் மணிக் குலம் – ஸ்ரீநிவாஸ்

காதலின் வண்ண வேறுபாடுகளைச் சொல்ல அகத்துறை இலக்கியம் பலவகை நிரந்தரப் படிமங்களை கொண்டுள்ளது. குறிப்பாக உள்ளத்து விளையாட்டுகளைச் சொல்ல பளிக்கறை, சந்தன குங்குமக் குழம்புகள், அகிற்புகை, யானையைக் கொன்ற சிம்ம பாதத்தடம், வண்டின் மயக்கம், மாணிக்க மரகதகக் கற்கள் போன்றவை. 

இவற்றுக்கிணையான ஒரு படிமம் கம்பனில் நாட்டு வளம், ஆற்று வளம் சொல்லப்படுகையில் ‘ஆற்றில் எஞ்சிய மணிகள்’ அல்லது ‘ஆற்றின் கரையோர நவமணிகள்’ என்பவை. பொதுவாக அருமணிகள் என்பவை மிகையை அழகாகக் கொண்ட நம் காவியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுபவை என்பது அறிந்ததுதான் என்றாலும் அதன் விந்தையான படிம வகைகளில் ஒன்று இந்த ஆற்றில் கிடக்கும் மணிகள் என்பது. நவீன இலக்கியம் எடுத்தாளாமலும் மரபிலக்கியர் பெரிதும் வாசிக்காமலும் இருப்பவற்றில் ஒன்று.

உழவர்கள் மண்ணை உழுகையில் சங்கு, மீன், பொன் ஆகியவற்றுடன் அருமணிகள் எழுந்து ஒளிவிடுவது சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மாஇருஞ்சடையோனின் கற்றையில் இவை ஒளிவிடும் கணங்களென இமைத்திருக்க, கங்கை அவற்றை அள்ளி ஆர்ப்பரித்து புவியிறங்குகிறாள். சரயு முதன்முதலில் காட்டின் சந்தனமும் அகிலும் யானை மதநீரும் கொண்டு காட்டாறாக இறங்கி நகர் நுழைகையில் நகரத்தின் முகங்களென இம்மணிகள் கரைகளில் அமைகின்றன. இராமன் நுழையும் மிதிலை நகரின் சாதாரண வீதிகள் அகத்தியன் கடல் குடித்தபின் நீரற்ற மணற்பரப்பு அவற்றிலிருந்த அருமணிகளுடன் ஒளிவிட்டதுபோல வெளித்திருக்கின்றன.

ஆற்றில் கவி சொல்வது போல ஒளிர்மணிகளை காண அவற்றை அங்கே கொண்டுவந்து நாமே கொட்டி பார்த்தால்தான் உண்டு. இயல்பு அணி அல்ல இது. எண்ணிக்கையிலும் அவ்வளவு அள்ளி வைப்பதுதான் அவர் வழக்கம். ஆக, ஆற்றில் மணிகள் என்ற கற்பனைக்கு வேர் எங்கிருக்கிறது?

ஆற்றுப் பேரொழுக்கால் பல இடங்களில் இருந்து கொண்டு வந்து போடப்பட்ட என்ன ஏதென்று தெரியாமல் பலநிறங்களில் மின்னும் துண்டுகள் அன்று வேடிக்கைப் பார்த்தவனுக்கு பித்துபிடிக்க வைத்திருக்க வேண்டும். இன்னொரு வகையில் இது கிரானைட் போன்ற பலவண்ண ஒளிமாறுபாடுகளாலான ஒரே நிலப்பரப்பை குறிக்கும் அணியாகவும் இருந்திருக்கலாம். மேரு மலையை அப்படித்தான் பல வண்ணங்களை, பொன்னை பிரதிபலிக்ககூடியதாக  காளிதாசனிலிருந்தே பார்க்கிறோம். அதுவே பின்னர் ஆற்றங்கரைகளுக்கும் ஏற்றப்பட்டிருக்கலாம். 

ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈரம் புனல்

பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகைச்

சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்

ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது.

அறுத்து செம்மை செய்யப்பட்ட பளிங்கு போல தெளிந்த நீர், அதன் படித்துறைகளில் இழைக்கப்பெற்றுள்ள நவமணிகளுடன் படியுந்தோறும் படியுந்தோறும் அதன் நிறத்தை பெறுவதால், பல நூல்களை ஆராய்ந்தும் உண்மைப் பொருளை பெற இயலாதவரின் உள்ளம் போல் விளங்குகின்றது அந்த வாவி. 

பம்பை வாவிப் படலம். சீதையைப் பிரிந்த ராமன் உளம் கலங்கி இருக்கையில் கிஷ்கிந்தைக்கு செல்லும் வழியில் பம்பை எனும் வாவியைக் கடக்கிறான். உச்ச செவ்வியலின் அழகியலில் ஒரு பாடுபொருளை அறிமுகப்படுத்துகையில் நேரடியாகத் தொடர்பற்ற கோணங்களில் பலவகைகளிலும் இணைத்து இணைத்து பொருளேற்றி, பிரக்ஞை முழுதாக தொகுத்துக்கொள்ள இயலாத அளவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடகத்தை தொடங்குவது இயல்பு. 

வாவியின் இயல்பாக தோற்றமாக கூறப்படும் பலவற்றில் ஒன்று இது. பலவகையான நிறங்கள் வழியாக அடித்து விலகும் இராமனின் மனம் எனக் கொள்ளலாம். அது புறச்சூழல்கள் மேல் சென்று படிகிறது. மீண்டும் விலகி உள்ளொடுங்கிய துயருக்குச் சென்று விடுகிறது. புறவுலகம் என்பது ஒரு பெரிய படித்துறை தான் என்பதே சற்று மனம் உறையச் செய்யும் கற்பனை.  ஒளிமணி வண்ணங்கள் நீரில் சுழிக்கையில் அதில் படிந்து படிந்து எதையும் பெற்றுக்கொள்ளாது ஒரு மனம் அங்கிருக்கிறது என்பதும், அது தூயதும் கூட என்பதும் இப்பாடலை ஒரு பொருளில் அமையச் செய்யாது  அலையடிக்கிறது.

அடுத்த படலத்தில் சொற்களால் தன் பேருருவம் காட்டி இராமனை தன்னை ஏற்கச் செய்யும் அனுமனின் அறிமுகத்தையும் இணைத்துப் பார்த்தால், ஆசிரியனின் வரவை எதிர்நோக்கிய மாணவனொருவனின் உள்ளக்கலக்கத்தின் இறுகிய சொற்களாக, அதன் பருவடிவாக அந்த நவமணி பித்திகை அந்நீரில் தோய்ந்திருக்கிறது. 

குவால் மணித் தடம் தொறும் பவளக் கோல் இவர்

கவான் அரச அன்னமும் பெடையும் காண்டலில்

தவா நெடும் வானகம் தயங்கும் மீனொடும்

உவாமதி உலப்பு இல உதித்தது ஒத்தது.

பொய்கையில் குவியல்களாக மணிகள் கிடக்கும் இடம்தோறும், பவளக்கோல் போன்ற சிவந்து நீண்ட கால்களையுடைய அரச அன்னங்கள் அவற்றின் பெடைகளோடு காணப்படுவது, அழியா வானகம் விண்மீன்களோடு எண்ணற்ற முழுமதிகளுடன் தோற்றம் கொண்டிருப்பது போன்றது. 

அதே பம்பை வாவி வர்ணனையில் அடுத்தப் பாடல். அன்னப்பறவை இணைகள் மகிழ்ந்திருக்கும் காட்சி. இதில் அன்னங்கள் நிலவாகவும் விண்மீன்களாகவும் தோன்றுகிறது. இதைச் சொல்கையில் மணிகளின் குவியல்களும், பவளக் கால்களும் ஏன் சேர்த்துச் சொல்கிறார்?

அன்றாட மனநிலையில், பொதுவாக மணிகள் கொண்ட பாடல்களோடு எளிதில் இணைய முடிவதில்லை. ஏனென்றால் முதலில் அவற்றை பலவகையான மின்னும் ஜிகினாப் பொருட்கள் என்றே கற்பனை செய்கிறது மனம். அவை இன்று கூச்சலிடும் அடையாளங்களாக தோன்றுவதால் நமக்கு ஒரு சிறு விலக்கத்தையும் அளிக்கலாம். 

ஆனால் கம்பன் காலத்தில் இத்தனை வகையான ஒளி என்பது மணிகளில் இருந்தே பெறப்பட்டிருக்கும் என்பதால் இவை மீதான பித்து இன்று எளிதில் உய்த்துணரக்கூடியது அல்ல. வடிவம், வண்ணம், வாசம் எனப் புலன்களை கவரும் அனைத்தின் சிறுசிறு வகைபேதங்களிலும் மனிதர்கள் பித்துக்கொண்டிருந்த காலமாக இருந்திருக்கலாம்.  

மணிகளைத் தண்வடிவ எரி எனலாம். ஒளியையே பருப்பொருளென கொண்டுள்ளவை. இந்த நுண்மைநிலையிலிருந்து தான் கவிமனம் சிதறிப் பரவியிருக்க வேண்டும். 

ஒளியைச் சொல்ல எத்தனை சொற்கள் வேண்டியிருக்கிறது. அது மின்னுகிறது. வீசுகிறது. நம்மைப் பார்க்கிறது. இல்லை இமைக்கிறது. அது கோபமா, கனல்கிறது. கான்றுகிறது, காந்துகிறது. அது தன்னைத்தான் எரிக்கிறது. எரித்து சுடர்கிறது; சுடாத சுடர் மலராகிறது. விரிக்கிறது. நாறுகிறது. வெளியை வெளித்து நிறைத்து நகைக்கிறது. தன்னில், பிறவற்றில் தோய்கிறது; மணி ஒளியை ஈனுகிறது. ஈன்று உமிழ்கிறது. உமிழ்தல் எனும் அதே பொருளில் காலுகிறது. மின்னலென வெட்டுகிறது. தங்களுக்குள் துவன்றி மிடைகிறது. அகன் வெளியில் விரிந்து பரவி பாய்ந்து செல்கிறது. 

வெவ்வேறு வகையான ஒளிவீசக்கூடிய இந்த மணிகள் இடையே இந்த சந்திரன் விண்மீன் போன்ற உறவு நிகழ்கிறது. இன்னும் விரிவான ஒரு பிரபஞ்ச கற்பனை. இன்னொரு வகைபேதம். அல்லது சொர்க்கமா? சூழ இருக்கும் அந்த மணிகள் அவர்கள் உறவில் வெளிப்படும் உணர்வுநிலைகளின், சூழல்களின் வண்ணங்களா. இவற்றைப் பார்த்து இமைத்திருக்கும் வேறு பல கண்களைச் சொல்கிறாரா? 

பவளக்கோல் போன்ற கால்கள் கொண்ட அன்னம் என்கிறார். பவளக்கோல் என்ற ஒரு பொருள் இருந்திருக்குமா? பவளக்கோல் என்ற செங்கோல் கொண்ட அரச அன்னங்களைச் சொல்கிறார். இவர்கள் அரசர் அரசியர் என்றால், அந்த நவமணிகளை குடிமக்களின் கண்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். தெளிவற்று சீதையின் பொருட்டு பின்னால் புலம்பவிருக்கும் இராமன் தன் நினைவுகளின் அடுக்கில் காணும் இணைந்திருந்த தருணங்களின் தொகுப்பாக கொண்டால் இப்பாடல் மேலும் பொருளுள்ளதாகிறது. 

தவா நெடு வானகம் என்ற சொல்லாட்சியில் தவா என்பது அழியாத, இறுதியில் எஞ்சுகிற என்ற பொருள் கொண்டது. வெறும் வானமெனும் கச்சாவில் தொடங்கி அழியாத வானத்தில் தயங்கும் மீன்களும் எண்ணற்ற நிறைமதிகளும் என்ற உருவகம் வரையிலான தொலைவை யோசிப்பது இக்கலையின் மிகை எனும் முகத்தையும் அறியும் பயணமாகவும் அமையும். சில நவமணிகள் நம் கொழுமுகத்திலும் இமைக்ககூடும்.

நன்றி – கவிதைகள் இதழ் 



Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading