இருள் பருகும் பகழி – பார்கவி

கம்பனின் பத்தாயிரம் பாடல்களை ஒவ்வொன்றாக வாசித்து விவாதித்து கடந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கையில் சற்று வியப்பாகவே இருக்கிறது. அதை ஒட்டி என்ன எழுதலாம் என்று யோசித்த பொழுது, ராவணன் செலுத்தும் தாமதாத்திரத்தை (தாமசாஸ்திரம்) ராமன் சிவ நாமம் செப்பி ஞானத்திரத்தை அனுப்பித் தகர்க்கும் பாடலைப் பற்றிச் சொல்லலாம் என்று தோன்றியது. வாரத்தில் 6-8 மணி நேரம் நேர்நிலையான செயல்பாடுக்காக கொடுத்தது ஒரு காரணம். மேலும், சமீபத்தில் நான் பங்கேற்ற எழுத்தாளர்/மருத்துவர் சுனில் கிருஷ்ணனின் ஆயுர்வேத அறிமுக வகுப்பிற்குப் பின் தாமசம் என்ற கருத்துரு பற்றிய ஒரு சிந்தனை உள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது.

யுத்தக்காண்டம், ராமன் – ராவணன் இருவருக்கும் இடையிலான இறுதிப் போர். ‘தாமசம்’ விளைவிக்கும் மந்திர அம்பை ராவணன் எய்கிறான். வரி கொண்ட பாம்பு குகைக்குள் நுழையும் தன்மை அதற்கு. மலையாளத்தில் ‘தங்குமிடம்’, ‘நேரம் கடத்துதல்’ என்ற பொருளிலும் ‘தாமசம்’ இயங்குகிறது. இருள், மாயை, தளர்ச்சி, மயக்கம், சோம்பல், செயலின்மை, தேக்கம் அனைத்தும் வசதியாக நிதானமாக அங்கு நிகழ்கிறது. மேருவின் மூலத்தில் இருந்து சுருண்டு உதிக்கும் பாம்பு அடங்கி மிக மெல்லமாக ஓசைப்படாமல் இருளை ஆழத்தை நோக்கி விருப்புடன் செல்கிறது. பாதாளத்து ஆழத்தின் இருள் தேக்கத்தை விரும்பி ஏற்பவர் உண்டா என்று கேட்டால் இல்லை என்று பதில் வரக்கூடும். நாம் விழும் பல அகழிகள் நாமறிந்தே நடப்பது தான். ஆனால் அதில் நாமறியாத கூறுகளும் உண்டு.

அது அம்பாக ஒரு புள்ளியில் நுழையும் பொழுது பல முகங்களைச் சூடி நிற்கிறது. சில வீரியத்தின், தீவிரத்தின் வடிவாக வரும். வரும்பொழுதே ‘நான் உன்னை பழி கொள்ளவே வந்தேன்’ என்று குருதியாடி நுழையும் ஓர் அம்பு. மிக மிக உயர்ந்ததாக நடித்து மேல்நிலையை காட்டி வரும் ஓர் இருள். இன்னொன்று ஒளிவும் கூச்சமும் இன்றி பேய்க் கோலம் பூண்டு வரும். இது ராமன் மீது ஏன் அனுப்பப்படுகிறது என்ற கேள்வி வரலாம். எப்படி செயல் நிலையில் இருப்பவர் மீது தாமசத்தை ஏவி அவரை நிலை குலையச் செய்ய இயலும்? தாமசம் செயலூக்கம் கொண்டவர்களை அண்டாது என்றப் புரிதலை இப்பாடல் சற்று மாற்றிப் பார்க்கிறது. அதீத செயல் நிலையில் உள்ளோர் அனுபவிக்கும் இனம் புரியாத தவிப்பை, முன் செல்ல முயன்று முயன்று தோற்கும் கணத்தில் எழும் சலிப்பை, எல்லாம் பொருளிழந்து செய்வதனைத்தையும் கைவிட்டு விடலாம் என்ற பாழ் எண்ணத்தில் உதிக்கின்றது.

தீ முகம் உடையன சில முகம் உதிரம்

தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய

 பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும்

வாய்முகம் வரி அரவு அனையன வருவ

ஒளியும் வெம்மையும், உயிரும் வண்ணமும், அழகும் அச்சமும் இணைந்து மிகப் பைய நுழையும் தாமசம். இதற்கு கண்ணுதலானை மனதில் எண்ணிக் கொண்டு தொடுக்கப்படும் அம்பு முறிமருந்தாகச் செயல்படுகிறது.

கண்ணுதல் ஒருவனது அடு படை கருதிப்

பண்ணவன் விடுதலும், அது நனி பருக

எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில்

துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய     

நெற்றிக் கண்ணில் விழித்துக் கொண்ட ஞானத்தின் கூர்மை தாமசத்திற்கு எதிரி. அது அழிவதில்லை, தொலைகிறது – கனவுப் பொழுதில் நனவு அழிவது போல, சொப்பன நிலையில் ஜாக்கிரம் இல்லாமல் ஆவது போல தாமசப்படையை ஈசன் அம்பு அழிக்கிறது. சற்று விசித்திரமான உவமை. கனவு தானே மாயை?

சைவ சித்தாந்தம் ஐந்து காரிய நிலைகளைச் சொல்கிறது – நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம்,  உயிர்ப்படங்கல். இந்த வரிசையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் நிலைகள். ஜாக்கிரத்தில் ஜாக்கிரம், சாக்கிரத்தில் சுஷுப்தி, ஜாக்கிரத்தில் சொப்பனம், ஜாக்கிரத்தில் துர்யம், ஜாக்கிரத்தில் துரியாதீதம் என்றிவை செயல்படும் படிநிலைகள் உண்டு. இதில் ஜாக்கிரத்தில் சொப்பனம் என்பது மூன்றாம் நிலை, மனம் பிராணனுடனும் ஆன்மாவுடனும் கூடி அறிவுணர்ச்சி அடங்கிய நிலை, எளிமையாக்கிச் சொன்னால் கனவெனத் தோன்றும் மயக்க நிலை.

இப்படியான மாய இருளில் சிக்கிச் சுழலும் மனமெனும் தாமசப்படையை சிவனின் அறிவுப்படை வென்றது என்று இருந்தால் நம்மால் நேரடியாக உவமையை விளங்கிக் கொண்டிருக்க முடியும். அதாவது நனவு போல் ஞானம் பிறந்துவிட்டது என்றாகிவிடும். இங்கு ‘கனவில் அழியும் நனவு போல்’ என்ற உவமை தாமசத்தை அழிக்கும் அம்பைச் சுட்டி நின்று நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது

அறுவை சிகிச்சை செய்த பின் நீங்கும் கண் பொறை போல என்றால் பொருள் சரியாக வருகிறது, அதில் பொருத்தமற்ற தெளிவு அமைந்துவிடுகிறது என்பதால் கைவிடுகிறேன். குறைபாட்டைச் சரி செய்யும் கண்ணாடியை கழற்றினால் குறையும் கண்பார்வை போல அந்த அம்பு செயல்பட்டது என்றால் அது உவமையின் இருண்மைக்கு அருகில் அமைகிறது என்றாலும் தாமசத்தின் இயல்பை முழுமையாக காட்டவில்லை. உவமைக்குள் குறை கண்ணுக்கு வெளியே இருக்கும் ஒரு கருவியில் இருக்கிறது, கம்பன் சுட்டும் தாமசம், கனவு x நனவு என்ற இரு துருவங்களில் நிற்பது அல்ல. அறிவுக்கு வெளியே நின்று பார்வையை மறைக்கும் திரை அகல்வதல்ல,  அறிவு தன் மயக்க நிலையில் அனுபவிக்கும் மாற்றம். தாமசம் நீங்கும்போது உலகம் புதிதாகத் தெரிவதில்லை — உலகுக்கும் அறிவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த தவறான உறவே நீங்குகிறது. ஏனெனில் அங்கு அழிக்கப்படுவது அறிவின் இன்மை அல்ல, அறிவுக்கும் பொருளுக்கும் இடையில் புகுந்திருக்கும் திரிபும் நிலைமாற்றமுமே. உணர்வை அழிக்காமல், உணர்வின் மீது படிந்திருக்கும் மயக்கத்தை அம்பு குறி வைக்கிறது.  

சுனில் கிருஷ்ணன் வகுப்பில் மன இயல்புகளை கணிக்கும் வினாபட்டியலை ஒன்றை நிரப்பச் செய்தார். ஒவ்வொரு வினாவிற்கும் ‘சத்வ ரஜஸ் தமஸ்’ என்ற முக்குணங்களைச் சுட்டும் மூன்று பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். பங்கேற்பாளர்களில் சிலர் சத்வம்/தமஸ் என்ற இரு எல்லைகளில் மனம் ஊசலாடுவதை குறிப்பிட்டோம். முக்குற்றங்களைப் பற்றிப் பேசும்பொழுது ‘கபம்’ என்ற நிலைத்த தன்மையை சொல்லி, அதன் உத்தம வடிவமாக சத்வம் இருக்கிறது என்றார். அதன் அதம அல்லது விரும்பத் தகாத வெளிப்பாட்டில் உருக்கொள்வது தாமச குணம். ஒரே தோஷத்தின் இரு முகங்கள். சத்வம் என்ற ஒளியேற்றப்பட்ட தாமச குணம் என்று நினைத்துக் கொண்டேன். இத்தகைய திரிபை எப்படிக் கையாள்வது?

தாமசம் ஒரு கனவு, விழிப்பில் வரும் நனவென்ற அறிவு அதை அழிக்கும் கணை என்றால் அது வழக்கமான ஒப்புமை தான். விழித்திருக்கும் ஒருவனின் விழிப்புக்குள்ளேயே கனவு புகுந்துவிடும் நிலையை அவர் சுட்டுகிறார். கனவு கலைந்து நனவு திரும்புவது’ என்ற எளிய இயக்கம் அல்ல என்பது அடிக்கோடிடப்படுகிறது. இன்னும் நுட்பமான ஒன்றைச் சொல்ல ஒரு திருகிய தர்க்கம் வர வேண்டி இருக்கிறது. அணியின் பொருள் குழப்பமே தாமசத்தின் மந்தத்தன்மையை உருவாக்க வருகிறது. அதைக்கொண்டே கனவு x நனவு :: அறியாமை X அறிவு என்ற சமன்பாடு தெரிந்தே தவிர்க்கப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட மூன்றாவது கண்ணின் மேல்நிலை அறிதலைக் கொண்டே விடுபட இயலும் என்பதை குறிப்புணர்த்துகிறார். அருவமாக ஒளி உண்டாகிறது. கண்ணுதல், கனவு, இமை என்ற சொற்களுக்குள் கவிமனம் தற்செயலாக வந்தமரவில்லை என்பதை நடுக்கத்துடன் எதிர்கொள்கிறேன்.

விழிப்பை ஆக்கிரமிக்கும் கனவும், கனவிலிருந்து விழிப்பை பிரித்தறியச் செய்யும் அறிவும் இரு ஆயுதங்களின் மோதல் அல்ல, இரு தீவிர நிலைகளின் மோதல். இந்த நிலைக்குள் அமிழ்ந்து விடுபடுதல் என்பது தொடரியக்கம். சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும், முள் அறிவிற்கும் மயக்கத்திற்கும் இடையில் ஆடிக்கொண்டே இருக்கும். தற்காலிகமாகவேனும், அறிவுக்கும் உண்மைக்குமான நிகர் உறவை மீள நிறுவுவதே நிகழச் சாத்தியமானது. அது இமைப்பொழுதில் நிகழ்வதென்பது ஒரு ஆறுதல், சிறிதளவு அருளும் கூட. 

 



3 responses to “இருள் பருகும் பகழி – பார்கவி”

  1. நமது வாசிப்புகளில் ஒவ்வொரு கணையையும் மாயங்கள் நிகழ்த்தும் சக்தி வாய்ந்த அம்புகள் என்பதைத் தாண்டி, அவற்றை உருவகங்களாக வாசிப்பது எப்படி என்பதையும் பேசி வந்துள்ளோம். இங்கு தாமசக் கணையால் இராவணன் இராமன் மேல் இருளை ஏவி விடுகிறான் என்பது நேரடி பொருள். இக்கட்டுரை அந்த தாமசத்தை தனக்குரிய வகையில் பொருளளிக்க, இன்னும் விரித்துக்கொள்ள முயல்கிறது. இருளே என்றல்லாமல் சோர்வு, மயக்கம், தளர்ச்சி, செயலின்மை என அதன் ஒவ்வொரு பொருளிலும் கூர்ந்து விரிவாக்குகிறது.

    ஆனால் இராவணன் ஏன் இதை இராமன் மேல் விட வேண்டும்? தளராத செயலூக்கம் கொண்டு அறம் நாடிச் செல்பவன் இராமன். அவனை எப்படி இது தடுக்க முடியும்? செயலற்றவனின் இருள் அல்ல, தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் பொருளின்மையாக, சோர்வாகவெல்லாம் உருவாகும் இன்னும் தீவிரமான இருள் என இதை விரித்துக் கொள்கிறார் பார்கவி. அது எப்படியெல்லாம் வந்து அணுகும் என்பதை _’தீ முகம் உடையன’_ பாடலின் வாசிப்பாக அவர் அளித்திருப்பதில் உள்ளது.

    அந்த இருளை அழிக்கும் முகமாக இராமன் விடும் அம்பு அடுத்து. முக்கணான் படையை எடுத்து அதை அழிக்கிறான். அஞ்ஞானத்தை ஞானம் போலவும், கனவை நனவு போலவும் இங்கு அந்தக் கணை தாமதப் படையை அழிக்கிறது என்று ஒருவர் நேரடியாக புரிந்துகொள்ள நேரும் இப்பாடலை. ஆனால் கம்பனின் உவமை வக்ரோக்தியுடன் சற்றே சுற்றி வந்து ஒன்றைச் சொல்கிறது. _’கனவினொடு உணர்வு என’_ என்னும் வரி இங்கு வரும் பகழியை, அறிவிற்கு செயலுக்கு வெளியே இருக்கும் இருள் என்றல்ல, அதனுள் உருவாகும் கனவு போன்ற திரை என்று காட்டுகிறது. ஆனால் அதுவும் நனவு மனதில் நிகழ்வதே. செயலூக்கம் – செயலூக்கத்தின் இருள் (கனவு) – அதுவே அதன் உணர்வும்.

    இதை விளக்க இரண்டு பின்னணிகளை அளிக்கிறார். சைவ சித்தாந்தத்தின் ஐந்து காரிய நிலைகளில் ஜாக்ரத்தில் ஸ்வப்னம் என்பது விழித்திருப்பவனின் விழிப்புக்குள் உருவாகும் ஒரு கனவை குறிக்கிறது. ஆயுர்வேதத்தின் கபம் குறித்த ஒப்புமை, எதிர் எல்லைகள் வழியாக நீளும் அதன் பரந்த நிலையை, நனவு கனவு மூன்றாம் நனவு என்ற தளத்தில் விரித்துக் கொள்வதாக புரிந்து கொள்கிறேன்.

    எனவே அந்த இருளை அழிக்க வரும் சிவகணை நனவு கனவு இரண்டையும் நோக்கும் மூன்றாவது விழியாகிறது. இமைத்தலில் அது அழிவதையும், கண்ணுதல் என்ற சொல்லாட்சியையும் பாடலின் அதிநுட்பங்களாக அடிக்கோடிடவும் செய்கிறார்.

    *
    ஒரு கேள்வியாக இதை மாற்றிக் கொள்ளலாம். செயலூக்கத்தில் ஒருவர் எதிர்கொள்ளும் சோர்வும் பொருளின்மையும் எல்லாம் தான் தாமசக் கணையின் சவால் என்றால், நனவு – அதில் உருவாகும் கனவு – இவை இரண்டையும் கண்காணிக்கும் மூன்றாவது விழியால் இது எப்படி இல்லாமலாகிறது?

    கட்டுரையின் ஆற்றல் முழுக்க இந்த விசித்திர- அதே நேரம் கூர்மையான உவமையை விளக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. உயர் செயலூக்க நிலையில் ஒருவர் எதிர்கொள்ளும் அந்த சோர்வு அல்லது பொருளின்மை என்ன? உடற்சோர்வு மட்டுமல்ல. ரஜஸ், செயலூக்க நிலையின் சோர்வும் அல்ல. முக்குணத்தொடரில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் ஒருவரில் இயல்கிறது.

    *ரஜஸ், பொருளுள்ள செயல்களை நான் செய்கிறேன் எனும் தன்னுணர்வு, அகங்காரம்.
    *தமஸ், பொருளுள்ள செயல் என்பதே ஒரு அர்த்தமற்ற கருதுகோள், அதை ஏன் வீணே இயற்ற வேண்டும்?
    *சத்வம், செயல்கள் தன்னளவில் பொருளுள்ளவை, நான் வெறுமனே பங்குகொள்கிறேன்.

    இங்கு செயலூக்க நிலையில் வரும் பொருளின்மை என்பது ரஜஸ் நேரடியாக தமத்தில் சென்று வீழ்வது, தர்க்கங்களுக்கு அப்பால். இராமனாக நாம் நமது முடிவிலாத தூணியில் இருந்து அம்பை எடுத்து எய்து கொண்டேயிருக்கிறோம். ஆனால் இடையறாது எய்யும் அந்த ஆற்றலே எங்கோ எய்வதற்கு எதிரியாகி நம்மை பாதாள இருள் நோக்கி விழத் தட்டுகிறது. அம்புகள் உள்ளிருந்து எழுவதுபோல, அந்த இருளும் நமது உள்ளிருந்தே எழுகிறது. செயலுக்குள் இருந்து.

    _பில முகம் நுழையும் வாய்முகம் வரி அரவு -_ என்பது தமம் முழுதாக பீடிப்பதை காட்டுகிறது. பெரிய பிலத்தை உண்டாக்கி அதை இனிய இல்லமென உணரச் செய்து மெல்ல உறைநிலைக்கு கொண்டு செல்கிறது. அங்கு இனிதிருப்பதே இயல்பு, செயலாற்றுதல் வீண் எனச் சொல்கிறது. அதை மேலும் செயலூக்கம் கொண்டு கடக்க இயலாது. அதீத செயலூக்கமே அதை விளைவித்தது.

    மூன்றாவது ஒரு கண் படையாக வருவது அதனாலேயே. இன்னொரு ராஜஸ பகழி கொண்டு அதை எதிர்க்காமல், கண்ணுதலை நாடுகிறான் இராமன். கட்டுரையில் இருப்பதற்கு அடுத்து வரும் பாடல்கள், _”ஒரு திசை முதல் கடை ஒரு திசை விரியும்”, “இருள் ஒரு திசை, ஒரு திசை வெயில் விரியும்”_ இரண்டும் அந்த இருளின் – அதாவது அவன் நனவில் உணரும் கனவின் மாயையை காட்டுகின்றன. இரு எல்லைகளிலாக அதன் குறிப்புகள் அமைந்திருப்பது இரண்டு கண்கள் உருவாக்கிக்கொள்ளும் உலக இயற்கையின் யதார்த்த வெளி. அதன் அதீதங்கள் ஒன்றிணைய முடியாமல் தவிக்கும் பிரக்ஞை வெளி. அங்கிருந்து உலகைப் பற்றிய இன்னொரு அறிவிற்கு செல்லாமல், அந்த யதார்த்தங்களை உருவாக்கிக்கொள்ளும் அறிவு மீதான இன்னொரு மூன்றாவது அறிவு நாடப்படுகிறது. அந்த மூன்றாவது கண் பிற இரண்டையும் பார்க்கும் ஒரு பார்வையாளர். பார்வையாளர் மட்டும்.

    அந்தக் கணை தமத்தை அழிக்கவில்லை, வெறுமே பருகுகிறது. ஆலகாலம் போல. கொடுங்கனவில் ஒரு வல்லசுரப் பேயொன்று துரத்துகிறது. அதை வீழ்த்துவது கனவிற்குள் இன்னொரு நிகர் அசுரப் பேயாகி அல்ல. விழித்தெழ வேண்டும். _’கனவினொடு உணர்வு என’_ என்பது கனவிற்குள் எழுந்த பொய்யான பிரக்ஞையுடன் கனவு கலைவது போல என்கிறது. அசுரப்பேய், கனவுகாணும் நாம் இரண்டும் கனவு கலைகையில் இல்லாமலாகிறோம். பேயை நாம் கொல்லவில்லை, ஆனால் பேயை கண்டு பரிதவித்த நானும் அங்கு இல்லை.

    காரிருள் சூழ்வது அப்படியே. பொருளுள்ள செயல் என ஒன்றில்லை. இவ்வுலகம் வெறுமையானது. அந்த வெறுமையை இதோ நான் உணர்ந்து கொண்டுவிட்டேன், இனி ஒன்றும் செய்வதற்கில்லை எனும் நிலைகளிலாக அந்த தமம் நம்மில் எழுகிறது. இந்த மூன்றாம் விழி, அந்த பொருளின்மைக்கு மாற்றாக இன்னொரு விரிவான பொருளை அளிப்பதில்லை. அது அந்த உணரும் சோர்வுற்ற ‘நானை’, இவ்வுலகை அப்படியாக வகுத்துக்கொள்ளும் அந்த தன்னிலையை விலகி இருந்து பார்க்கிறது. அதன் அனைத்து உணர்வுகளில் இருந்தும் விலகுகிறது. அப்படியாக அந்த இருளை அது பருகுகிறது. உலகிற்கும் தனக்கிற்குமான உறவை சீரமைத்துக் கொள்கிறது. ஆனால் இவை யாவும் இமைக்கணத்தில் நிகழ்கிறது.

    இருளின் அந்த வர்ணனைகள் அப்படி இராமன் மேல் இராவணனால் ஏவப்படுகின்றன என்பதை விட, இராமன் கோணத்தில் அவை அப்படி தெரிகின்றன என்று பார்க்கலாம். வடிவமற்ற காரிருளுக்கு தான் எதிர்கொள்ளும் வகையான வடிவத்தை அளித்து அவற்றை எதிர்கொள்ள யத்தனமாகிறான் என்பதாக. அந்த பொருளின்மையை எதிர்கொள்ளாமல், பொருளின்மையை உணர்வது எது எனக் கேட்டுக்கொள்வது அந்த மூன்றாம் விழியை திறக்கிறது. அத்திறப்பே எஞ்சியவற்றை செய்துவிடுகிறது.

    கருதுகோள்களை புரிந்துகொள்வதற்கான பின்னணிகளை அளிப்பது, சொற்பொருளை முதற்பொருள் கடந்து அதன் அடுத்த தளங்களுக்கு மிக நுணுக்கமாக பின்தொடர்வது, உவமைகளால் விளக்குவது என தீவிரமும் ஆழமும் கொண்ட வாசிப்பை அளிப்பது இக்கட்டுரை. அனுபவ மண்டலத்திலிருந்து பேசுபொருளை கையாண்டு விரித்துக்கொள்வதையும் நாம் உணர்கிறோம். அணியின் பொருட்குழப்பமே தாமசத்தின் மந்தத்தன்மையை உருவாக்குவது போன்ற இடங்கள் கவர்ந்தவை. விசித்திரமான, விவாதிக்க சற்று சிரமமான ஒரு இடத்தை இக்கட்டுரை எடுத்துக்கொள்கிறது. அழகுற நேர்த்தியுடன் எழுதப்பட்டுள்ளது. சற்று கவனமெடுத்து வாசிக்க வேண்டியது.

    (நனவு – பிரக்ஞை, Consciousness, நினைவு அல்ல.)

  2. மையம்மாக எழுப்பபடும்‌ கேள்வியை நான்‌ இப்படி பார்க்கிறேன், தாமதம் என்பதை அறியாமை என்று எடுத்து கொள்வோம். பெரும்பாலும் நாம் அறிவு என்பது அதற்க்கு தொடர்பற்ற எதிர் நிலையானது என்று நினைக்கிறோம். ஆனால் அறிவு என்பதை கூர் தீற்றப்பட்ட அறியாமையாக பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அல்லது ஒரு spectrum இன் இரு‌ எல்லைகளாக பார்க்கலாம். இந்த spectrum நேர் கோடா அல்லது வட்டமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க ( இதை கபத்தின்‌ இரு தன்மைகள் மூலமாக சுட்டினீர்கள் என்று தோன்றுகிறது) இந்த போர்‌ காட்சியில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. தாமதத்தை அழிக்கவேண்டும்

    இன்மையை அழிப்பது என்பது ஒரு வித அறியாமை தான். அதை நிறப்பலாம் ஆனால் அழிக்க முடியாது. ஏனென்றால் அது இல்லையே. அப்படி என்றால் அதை எவ்வாறு தடுப்பது ?

    இங்கு கண்ணுதல் ஒரு‌ முக்கியமான பங்கு வகுக்கிறது. நம் இரு கண்கள் அறியும் ஒளியும் இருளும் ஒரு வித contrast என்று தான் விஞ்ஞானம் கூறுகிறது. அப்படி என்றால் இருள்‌ என நாம் அறிவது நாம் அறிந்த ஒளியுடன்‌ ஒரு contrast. இந்த contrastஐ பகழியை வர்ணிக்கும்‌ பாடலில் பார்க்கலாம்.

    அப்போது அந்த வேறுபாடற்ற கண் வேண்டியிருக்கு. அது தியானத்தின்‌ கண். அங்கே இதுவும் அதுவும் இல்லை ஆகவே இருளும்‌ இல்லை ஒளியும்‌ இல்லை. அப்படி ஒரு இடத்தை நாம் சாக்கிரத்தில் உணரமுடியாது, கணவு காணலாம்.

  3. இராவணன் தாமசம் எனும் அம்பு விடுகிறான். அது மேரு மலையிலிருந்து பாதாளத்தை நோக்கி வரும் வரி கொண்ட பாம்பு. நிதர்சனத்திற்கு சோம்பலும், இருளுக்குள் மிகவும் விரும்பி செல்லும்தன்மை.

    சிவனின் மூன்றாம் கண் ஞானத்தின் கூர்மையினால் இராமனின் ஒளி அம்பானது / தாமச தன்மையைப் பருகுகிறது.

    ஆனால் இராமனின் அம்பின் பண்பு நேர்மறையாக சொல்லப்படவில்லை – இல்லை;

    கனவை அழிக்கும் நனவு
    என்றில்லாமல்;

    “கனவு கனவினோடு உணர்வு”. என வருகிறது.

    கம்பனின் பகழி கனவும் நினைவும் ஒன்றியிருப்பது. கம்பனின் அம்பில் “ஏற்பு” இருக்கிறது, ஏதும் விலக்காமல் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வது: இருளைப் பருகுகிறது. இரு உச்சங்களும் ஒன்றை ஒன்று உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுவது.

    அதன்பின் இருளை தொலைக்கிறது. தோன்றி மறைந்து தோன்றி மறைந்து விளையாடும் தாமச குணமும் அதை பருகும் ஒளியும்.

Leave a Reply

Discover more from Imbarvari

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading